சென்னை டிடிகே சாலையில் இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று விருதுகளை வழங்கினார். பின்னர் விழாவில் பேசிய அவர், “இந்தியாவில் ஏற்றுமதியில் தமிழகம் மூன்றாவது மிகப்பெரிய மாநிலமாக உள்ளது. தமிழ்நாட்டை ஏற்றுமதியில் முதல் மாநிலமாக மாற்றுவதே என்னுடைய லட்சியம்.
மேலும் இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பில் மொத்தம் 35 ஆயிரம் ஏற்றுமதியாளர்கள் உள்ளனர். அதில் 5 ஆயிரம் பேர் தமிழர்கள் என்பதில் பெருமை அடைகிறேன். தமிழக அரசு ஏற்றுமதியை ஊக்குவிக்க பல திட்டங்களை உருவாக்கியிருக்கிறது. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் 24 பொருட்களுக்கு விரைவில் புவிசார் குறியீடு வழங்குவதற்காக விண்ணப்பித்திருக்கிறோம்.
ஏற்றுமதியை 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் அளவுக்கு முன்னேற்றுவதே நம் நோக்கம். ஏற்றுமதியில் தென்மண்டலத்தில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என்பதில் பெருமை கொள்கிறேன். தமிழ்நாடு ஏற்றுமதியில் இன்னும் பல மடங்கு உயர முடியும். அமைச்சர் தங்கம் தென்னரசு தனது துறையை கண்ணும் கருத்துமாக கவனித்து கொள்கிறார்” என்று பேசியுள்ளார்.