மின்கம்பி அறுந்து விழுந்ததால் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தில்லைவிடங்கன் கிராமத்தில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிமன்யு(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் அபிமன்யு ஒரு வயல்வெளியில் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மேலே சென்ற மின்கம்பி அறுந்து அபிமன்யு மீது விழுந்ததால் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.