ஆக்கி போட்டியில் இந்திய அணியின் முன்கள ஆட்டக்காரராக விளையாடுவதற்கு அரியலூர் வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அரியலூர் நகரில் வசித்து வருபவர் ஆக்கி விளையாட்டு வீரர் கார்த்திக் (21). இவர் ஆசிய கோப்பைக்கான ஆக்கி போட்டியில் விளையாடுவதற்கு இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். இவர் மிகவும் ஏழ்மை நிலை குடும்பத்தை சேர்ந்தவர். இவரின் தந்தை செல்வம் வங்கியில் இரவுநேர காவலராக பணிபுரிந்தார். அதன்பின் அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் காவலராக பணியாற்றி வருகின்றார். இவருடைய தாய் வளர்மதி வீடுகளில் பாத்திரம் தேய்த்து வீட்டு வேலை செய்து வருகின்றார்.
இந்த நிலையில் இவர்கள் கார்த்திக்கை படிக்க வைத்துள்ளார்கள். கார்த்திக் ஏழாம் வகுப்பு வரை அரியலூரில் இருக்கின்ற தூய மேரி மேல்நிலைப்பள்ளியில் படித்திருக்கிறார். அப்போது கார்த்திக் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் இருந்தது. இதை பார்த்த உறவினர் ஒருவர் அவரை சென்னையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. வில் சேர்க்க அறிவுரை கூறினார். இதனையடுத்து அவரின் குடும்பத்தினர் அவரை அங்கு சேர்த்துள்ளனர். கார்த்திக் ஏழாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சென்னையில் படித்தார். கார்த்திக்கின் விளையாட்டு திறனை பார்த்து திருச்சியை சேர்ந்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சியாளர் அவரை அழைத்து விளையாட்டு திறனை மேம்படுத்தினார்.
இதனையடுத்து பள்ளிப்பருவத்தில் 14 வயது முதல் 17 வயது வரைக்கு உட்பட்ட ஆக்கி போட்டியில் கலந்துகொண்டார். அதன்பின்னர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை வரலாறு படித்து வந்துள்ளார். அப்போது 19 வயதுக்கு உட்பட்ட போட்டிகளில் கலந்துகொண்டார். இதனை அடுத்து முதலமைச்சர் கோப்பைக்கான ஆக்கி போட்டி, சீனியர் நேஷனல், ஜூனியர் அசிஸ்டன்ட் ஆல் இந்தியா யுனிவர்சிட்டி போட்டிகளில் கலந்துகொண்டார். இதைத்தொடர்ந்து அவரது விளையாட்டு திறமையால் பெங்களூர் சாய் விளையாட்டு மையத்திற்கும், எக்சலன்ஸ் அணிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அங்கு பல போட்டிகளில் கலந்து கொண்டார்.
தற்சமயம் இந்தோனேஷியாவில் நடைபெற இருக்கின்ற ஆசியக் கோப்பைக்கான ஆக்கி போட்டியில் இந்திய அணியில் முன்கள ஆட்டக்காரராக விளையாடுவதற்கு தேர்வு செய்யப்பட்டார். இதை பார்த்து அவரின் குடும்பத்தினர், அப்பகுதி மக்கள் சந்தோஷம் அடைந்துள்ளனர். மேலும் அவருடைய குடும்பத்தினர் இனிப்புகளை வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். மிக ஏழ்மை நிலை குடும்பத்தை சேர்ந்த கார்த்திக் விடாமுயற்சி மற்றும் விளையாட்டு திறமையால் வென்றுள்ளார். இந்த பெருமை அரியலூருக்கும், தமிழ் நாட்டிற்கும் சேரும் என்று சமூக ஆர்வலர்கள் கூறினார்கள்.