அடையாளம் தெரியாத வாகனம் மோதி புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் கோட்டை பகுதியில் தனபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆத்தூர் சாலையில் மூங்கில் மண்டி நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தனபால் இரு சக்கர வாகனத்தில் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஆத்தூர் புறவழிசாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று தனபால் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த தனபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தனபாலின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.