மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் மேலும் ஒரு வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வடிவீஸ்வரம் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான தினேஷ்குமார், ருத்திரன் ஆகியோருடன் காவல்கிணறு பகுதியில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்றுள்ளார். அதன் பிறகு மூன்று பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் தோவாளை அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனை அடுத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தினேஷ் குமார் மற்றும் ருத்திரன் ஆகிய இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நேற்று தினேஷ்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.