பட்டப்பகலில் பெண்ணை எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை அருகில் பேட்டை ரொட்டிக் கடை பேருந்து நிலையத்திலிருந்து பழையபேட்டை செல்லும் பாதையில் ஆதம்நகர் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் நேற்றுமுன்தினம் மதியம் ரோட்டின் ஓரம் ஒரு பெண்ணின் சடலம் தீயில் எரிந்து கொண்டு இருந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உடனே பேட்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் தலைமையில் காவல்துறையினர் தீயை அணைத்தார்கள். ஆனால் அதற்குள் உடல் முழுவதும் முற்றிலும் எரிந்து கருகி கட்டையாகி விட்டது. அதன்பின் மாநகர தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு கிடைத்த தடயங்களை சேகரித்துள்ளார். அதன்பின் அந்த பிணத்தை கைப்பற்றி காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த பெண் 55 வயதிற்கு மேல் இருக்கும் என்பதும் அவர் கழுத்து பகுதியில் துப்பட்டாவால் இறுக்கிய நிலையில் இருந்தது தெரிய வந்துள்ளது. ஆனால் அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதை தொடர்ந்து காவல்துறையினர் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் அந்தப்பகுதி மக்களிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில் பழைய பேட்டையில் இருந்து ஒரு ஆட்டோவில் இரண்டு பெண்கள் வந்துள்ளார்கள். ஆனால் சிறிது நேரம் கழித்து ஒரு பெண் மட்டும் ஆட்டோவில் ஏறி சென்றது தெரியவந்துள்ளது. அதனால் ஆட்டோவில் தப்பிய அந்த பெண்தான் அவரை எரித்து கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர்.
இதுகுறித்து விசாரணை நடத்த இன்ஸ்பெக்டர் ஹரிஹரன், ராஜசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை காவல்துறையினர் ஆட்டோவில் தப்பிய பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்?, அந்த பெண்ணை அழைத்து சென்று வந்த ஆட்டோ ஓட்டுநர் யார்? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் பெண்ணை எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.