பயணிகள் பேருந்தும் லாரியும் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைன் நாட்டில் ரிவ்னே என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று எரிபொருள் ஏற்றி சென்ற லாரி மீது பயணிகள் பேருந்து மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சுமார் 17 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போரின் போது ஏற்கனவே நிறைய உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விபத்தில் மக்கள் உயிரிழந்துள்ளதால் அந்நாடு மேலும் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அந்நாட்டு மக்களுக்கு நேற்று நடத்திய தினசரி செய்தியில் மேற்கு ரிவ்னே பிராந்தியத்தில் பயங்கரமான சாலை விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் ஒரு பேருந்து, ஒரு கார் மற்றும் எரிபொருள் லாரி ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டுள்ளன. இந்த விபத்தில் தற்போதைய நிலவரப்படி 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் இன்னும் பலி எண்ணிக்கையானது உயரலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விபத்து உக்ரைனுக்கு எதிரான ரஷிய போருடன் நேரடி தொடர்புடையதாகத் தெரியவில்லை என்றும் ஜெலன்ஸ்கி தனது உரையாடலில் தெரிவித்துள்ளார்.