செல்பி எடுக்க முயன்ற போது ரயிலில் அடிபட்டு வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லூர்பேட்டை புத்தர் நகரில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கானா பாடல்களை எழுதி செல்போனில் வீடியோ எடுத்து அதனை யூடியூபில் பரப்பி வந்துள்ளார். இந்நிலையில் மேல்ஆலத்தூர் ரயில் நிலையம் அருகே வசந்தகுமார் தனது நண்பர்களுடன் கானா ஆல்பம் பாடல் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க முயன்ற போது அவ்வழியாக வேகமாக வந்த ரயில் வசந்தகுமார் மீது மோதியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதனை பார்த்து நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து வசந்தகுமாரை கட்டிப்பிடித்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் நேற்று வசந்தகுமார் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.