மே 5 ஆம் தேதி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு நடைபெற இருப்பதால் அன்றைய தினம் கடைகள் இயங்காது என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் அறிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் வருகின்ற 5 ம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற இருக்கின்ற இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருக்கின்றார்.
மேலும் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்ற நிலையில் சமயபுரம் அருகே 52 ஏக்கரில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மனிதர்களின் துயர் துடைத்திட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை ஆற்றும் வகையில் மாபெரும் மாநாட்டினை வணிகர் தினமான மே 5ஆம் தேதி நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
வரும் மே 5 ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை அளித்து 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் திருச்சி தரணியில் திரள இருக்கின்றனர். மேலும் மாநாட்டில் பங்கேற்கும் தமிழக முதல்வரை வணிகர்கள் அனைவரும் வரவேற்று வணிகர்கள் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தையும், வணிகர்கள் வரலாற்றில் புதியதோர் மைல் கல்லையும் படைத்திட இருக்கின்றார்கள்.
நடைபெற இருக்கும் 39 வது மாநில மாநாடு வணிகர்களின் வரலாற்றில் முத்திரை பதித்து ஒரு அடையாளமாக மாநாடாக வணிக வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக நிச்சயம் அமையும் என்கிற உறுதியோடு குடும்ப விழாவாக கருதி வணிகர்கள் குடும்பத்துடன் பங்கேற்க இருக்கின்றனர். மேலும் மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும் மாநாடு அரங்கிலேயே காலை சிற்றுண்டி, மதிய உணவு, மாலை தேநீர் என அனைத்தும் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
மே 5-ஆம் தேதி வணிகர் தின மாநாடு குறுகிய கால அவகாசமே இருக்கின்ற நிலையில் நிர்வாகிகள் அனைவரும் துரிதமாக செயல்பட்டு மாநாட்டை வெற்றி மாநாடாக சிறப்பித்த தங்களின் அன்பான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.மேலும் மாநாட்டிற்கு வருகை தர இருக்கும் மனிதர்கள் மிகுந்த பாதுகாப்புடன் எச்சரிக்கையோடும் தங்களின் பயணங்களை மேற்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.