மின்சார தட்டுப்பாடு நாடு முழுவதும் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. பல மாநிலங்களிலும் தினசரி மின்வெட்டு 2 முதல் 8 மணி நேரம் வரை ஏற்பட்டு வருகிறது. மேலும் மின்சார பற்றாக்குறைக்கு நாட்டில் நிலக்கரி உற்பத்தி குறைந்தது தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் எதிர்க்கட்சிகளும் மின்சார பற்றாக்குறைக்கு நிலக்கரி உற்பத்தி குறைபாடு தான் காரணம் என்று குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் மத்திய நிலக்கரித்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி நிலக்கரி உற்பத்தி கடந்த ஒரு மாத காலத்தில் 12 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதாவது இது தொடர்பில் பிரகலாத் ஜோஷி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 29 வரை இந்தியாவில் நிலக்கரி உற்பத்தி 12 சதவீதம் உயர்ந்து, 1.7 மில்லியன் டன்னிலிருந்து 1.9 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் இறக்குமதி ஏப்ரல் 1-ஆம் தேதி நிலவரப்படி 1.6 மில்லியன் டன்னாக இருந்தது. அதுவே ஏப்ரல் 29ஆம் தேதி அன்று 1.9 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.