சுற்றுலா வேனும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அம்மாபாளையம் பால் பவுடர் நிறுவனம் அருகே தர்மபுரியில் இருந்து சுற்றுலா வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சுற்றுலா வேனும், எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பரமசிவம், பிரபு, மணி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர். இதற்கிடையில் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் சாலையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 7 பேரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூன்று பேரின் சடலங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.