உக்ரைனின் ஹார்சன் மாகாணத்தில் ரூபேள் பணம் அதிகாரப்பூர்வ பணமாக அறிமுகப்படுத்தப்படும் என ரஷியா அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 66-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயற்சிசெய்தபோதும் அந்த முயற்சிகள் தோல்வியை சந்தித்து வருகின்றன. அதேநேரம், உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இதனால், போர் தொடர்ந்து நீடித்து வருகின்றது.
இதற்கிடையில், உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷியா தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக, ஹார்சன், டான்பாஸ்க் உள்ளிட்ட பகுதிகள் ரஷிய ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. இந்தநிலையில், ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் ஹார்சன் மாகாணத்தில் ரூபேள் பணம் அதிகாரப்பூர்வ பணமாக அறிமுகப்படுத்தப்படும் என ரஷிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முன்னதாக, போர் தொடங்கியபோது உக்ரைனின் பகுதிகளை கைப்பற்றுவது நோக்கம் அல்ல, உக்ரைனின் ராணுவ பலத்தை அழிப்பது மட்டுமே நோக்கம் என ரஷியா அறிவித்திருந்த நிலையில் தற்போது கைப்பற்றிய பகுதிகளில் தங்கள் நாட்டு பணத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் மூலமாக போரில் கைப்பற்றிய உக்ரைனின் பகுதிகளை முழுவதும் தங்கள் ஆளுகைக்கு கீழ் கொண்டுவர ரஷியா திட்டமிட்டிருக்கிறது என்பது உறுதியாகியுள்ளது.