தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வாலிபரை தாக்கிய குற்றத்திற்காக காவல்துறை மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மலையன்குளம் ஜெருசலேம் நகரை சேர்ந்தவர் தங்கதுரை. இவரும் இவரது நண்பரும் சம்பவம் நடைபெற்ற அன்று இரவு இருசக்கர வாகனத்தில் புளியங்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சங்கரன்கோவில் நகர்புற காவல் துறையினர் இருசக்கர வாகனத்தை வழிமறித்து சோதனை நடத்தினார்.
இந்த சோதனையின்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது. இதில் தங்கதுரை காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டார். ஆனால் காவல் துறையினரோ தங்கதுரை காவல்துறையினரை தாக்கியதாக கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் படுகாயம் அடைந்த தங்கதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட உறவினர்கள் மூலம் சங்கரன்கோவில் ஜூடிசியல் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தவறு காவல்துறையினரின் மேல் உள்ளது. பொய் வழக்கு பதிவு செய்த குற்றத்திற்காகவும், தங்கதுரை என்பவரை தாக்கிய குற்றத்திற்காகவும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.