குரூப் 4 தேர்வில் முதலிடம் பிடித்த சிவகங்கையை சேர்ந்த 46 வயதான ஆடு மேய்க்கும் தொழிலாளியிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் கடலூரைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி திருவராஜ் ஒருவரால் 289.5 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று இருக்கிறார். கேள்விகள் கடுமையாக இருக்கும் என்பதால் தொடர்ந்து படித்து வந்து தேர்வு எழுதுபவர்கள் 250 மதிப்பெண் எடுப்பதே சவாலான விஷயம்.
ஆனால் 25 ஆண்டுகளுக்கு கல்லூரி படிப்பை முடித்த திருவராஜ் மாநிலத்தில் முதலிடம் பிடித்தது எப்படி என்ற கேள்வி எழுந்தது. சிவகங்கையில் பல தேர்வு மையங்கள் இருக்கும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேர்வு மையத்தை தேர்ந்தெடுத்து திருவராஜ் தேர்வு எழுதியுள்ளார்.
சிவகங்கையை சேர்ந்த இடைத்தரகர் ஒருவரின் உதவியுடன் திருவராஜ் ராமேஸ்வரம் மாவட்டத்தின் தேர்வு மையத்தை தேர்ந்தெடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது சென்னையில் வசிக்கும் சிவகங்கையை சேர்ந்த ஒருவர் ஏற்கனவே சிலரை டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத வைத்து அதன் மூலம் முறைகேடாக வேலைவாய்ப்பு பெற்றதாக கூறப்படுகிறது.
இதை அறிந்த திருவராஜ் அந்த நபரை அணுகி குரூப் 4 வேலைக்கு முயன்றதாகவும் அதன் அடிப்படையிலேயே ராமேஸ்வரத்திற்கு சென்று தேர்வு எழுதியுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதுதொடர்பான விசாரணையும் சூடு பிடித்துள்ளதாக திருவராஜிடம் விசாரணை முடிந்த பின்னர் சிபிசிஐடி போலீசார் சிவகங்கைக்கு சென்று விசாரணை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.