ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியபின் கெடுபிடி உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர்.அந்த வகையில் பல்கலைக்கழகங்களில் மாணவ, மாணவிகள் சேர்ந்து படிப்பதை தடுக்கும் வகையில், மாணவிகள் காலை நேரத்திலும், மாணவர்கள் பிற்பகல் நேரத்திலும் வர வேண்டும் என உத்தரவிட்டு இருக்கின்றனர். இந்தநிலையில் இருபாலர் சேர்ந்து படிக்கும் முறையில் நேற்று புதிய உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
இதுபற்றி உயர்கல்வி அமைச்சக செய்தி தொடர்பாளர் அகமது தாகி கூறியபோது, புதிய கால அட்டவணைப்படி வாரத்தில் மூன்று நாட்கள் முழுக்க முழுக்க மாணவிகள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றார்கள். அந்த நாட்களில் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. மேலும் மீதி மூன்று நாட்கள் முழுக்க முழுக்க மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றது. காபூல் பல்கலைக்கழகத்தில் கல்வி கவுன்சில் தெரிவித்த யோசனைப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இதன் மூலமாக மாணவ, மாணவிகளுக்கு செய்முறைப் பயிற்சிகளுக்கும், அறிவியல் ஆராய்ச்சிக்கும் போதிய நேரம் கிடைக்கும். தற்போதைய காபூல் பல்கலைக்கழகம், காபூல் பாலிடெக்னிக் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மட்டும் மே மாதத்திலிருந்து இந்த நடைமுறை அமலுக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.