குஜராத்தில் 7-ம் வகுப்பு இறுதியாண்டு தேர்வு வினாத்தாள் கசிந்ததையடுத்து மாநிலம் முழுவதும் தேர்வு நிறுத்தப்பட்டது.
குஜராத் மாநிலத்தில் 7-ம் வகுப்பிற்க்கான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான இறுதியாண்டு தேர்வு நேற்றும், இன்றும் நடைபெறுவதாக இருந்தது. இந்தநிலையில், அம்மாநிலத்தின் பவ்நகர் மாவட்டம் தலஜா தலுகா நஷ்வட் கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் தேர்வுத்தாள் வைக்கப்பட்டிருந்த அறையின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை தலைமை ஆசிரியர் கண்டறிந்தார்.
மேலும், அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த அறிவியல், சமூக அறிவியல் தேர்வு வினாத்தாள்கள் எடுக்கப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்த அவர் உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளார். இதில் அந்த பள்ளியில் படித்த 2 மாணவர்கள் வினாத்தாளை திருடியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் அந்த மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் வினாத்தாளை திருடியதை மாணவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இதனையடுத்து நேற்றும், இன்றும் நடக்கவிருந்த 7-ம் வகுப்பு அறிவியல், சமூக அறிவியல் தேர்வுகளை குஜராத் அரசு மாநிலம் முழுவதும் ஒத்திவைத்தது. மேலும் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் வரும் 29 மற்றும் 30-ம் தேதிகளில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.