Categories
மாநில செய்திகள்

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பாரபட்சமா? தமிழக அரசு மறுப்பு….!!!!

கடந்த 2018ம் ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான, நியாயமான உதவித்தொகையை நிர்ணயித்து வழங்க கோரி நேத்ரோதயா என்ற அமைப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்நிலையில் கடந்த முறை அந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, உதவித்தொகையை அதிகரித்து வழங்கும் விஷயத்தில் சமூக நலத்துறை செயலாளர் அக்கறையுடன் செயல்படவில்லை.

மேலும் குறைவான உதவித்தொகை வழங்கி அவமானப்படுத்த வேண்டாம் என்ற கருத்தை தெரிவித்திருந்தனர்.ஆகவே இதுகுறித்து சமூக நலத்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நிலையில், இவ்வழக்கு நேற்று மீண்டும் தலைமை நீதிபதி முனீஸ்வரர்நத் பண்டாரி தலைமையிலான முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது  தமிழக அரசு தரப்பில், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு பாகுபாடு காட்டப்படவில்லை. மேலும் நிதி உதவி போன்ற பல்வேறு உதவிகளை வழங்கி வருவதாகவும்  தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து 21 வகையான மாற்றுத் திறனாளிகளில் ,5 வகையினர் வேலைக்கு சென்று வருமானம் ஈட்ட முடியாதவர்கள். எனவே அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2000 வீதம் வழங்கப்படுவதாகவும், மற்ற அனைத்து வகையினருக்கும் ரூ.1000  வழங்கப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் போக்குவரத்தில் சலுகை, மருத்துவ உதவி, ரேசன் சலுகை உள்ளிட்டவற்றையும்  வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சமூக நலத்துறை முதன்மை செயலாளர் நேற்று ஆஜராகாத நிலையில், அவர் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

அப்போது கூறிய நீதிபதிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதியான வாழ்க்கை குறித்து நீதிமன்றம் கேட்கவில்லை. ஆனால் அவர்களின் அடிப்படை வாழ்வாதாரத்திற்கான அரசின் நடவடிக்கைகள் பற்றியே நீதிமன்றம் அறிய விரும்புவதாக தெரிவித்தனர். அதன் பிறகு, சமூக நலத்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க மறுத்த நீதிபதிகள், அவர் ஆஜராகி நீதிமன்றத்திற்கு உதவ வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மேலும் இவ்வழக்கில் உதவித்தொகையை உயர்த்தி வழங்குவது குறித்து குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள அரசுக்கு  நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளன. இதையடுத்து  இவ்வழக்கு விசாரணையை ஜூன் 8ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

Categories

Tech |