ஏப்ரல் 24ஆம் தேதி வரை மனிதாபிமான இடைநிறுத்தத்திற்கு ஐநா பொதுச்செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையேயான போரை ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தின் புனித வாரத்தை முன்னிட்டு நான்கு நாள்களுக்கு நிறுத்திவைக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர், அன்டோனியோ குட்டரெஸ் கேட்டுக்கொண்டுள்ளார். புது வாழ்வின் கொண்டாட்டங்களுக்கு மாற்றாக, இந்த ஈஸ்டர் திருநாள் உக்ரைன் ரஷ்யா இடையிலான வன்முறைகளுடன் ஒத்துப்போகிறது என தெரிவித்திருக்கிறார்.
மேலும் இருநாட்டு ராணுவத்தின் தீவிரமான மோதல் போக்கு மற்றும் ஆயுத தாக்குதலின் காரணமாக இந்த போர் முடிவுக்கு வராமல் அதிகப்படியான வன்முறையையும் அழிவையும் தவிர்க்க முடியாததாக மாற்றியிருக்கிறது என தெரிவித்திருக்கிறார். மேலும் வர இருக்கும் புனித வியாழன் முதல் ஈஸ்டர் திருநாளான ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 24ம் தேதி வரை மனிதாபிமான இடைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
இந்த வியாழன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை போரினால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மரியுபோல், கெர்சன், டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் போன்ற பகுதிகளில் மனிதாபிமான உதவிகளை செய்ய ஐக்கிய நாடுகள் சபை தயாராக இருப்பதாக அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அறிவித்துள்ளார்.