1970 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை பொருளியல் படித்த மாணவர்கள் அரை நூற்றாண்டுக்கு பிறகு மீண்டும் ஒன்று கூடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1968 முதல் 1970 ஆம் ஆண்டுகளில் முதுகலை பொருளியல் படித்த 31 மாணவர்கள் அனைவரும் பேராசிரியர், மாநகராட்சி ஆணையர், அரசு பணி, தொழில்முனைவோர் என பலவித பணிகளில் பணியாற்றி வருகின்றனர்.
பணி சூழல், குடும்பம் ஆகிய காரணங்களால் படிப்பு முடிந்த பிறகு ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருந்து வந்த நிலையில் அனைவரும் ஒன்றாக இணைந்து நேரில் சந்திக்க ஏற்பாடு செய்தனர். 52 ஆண்டுகளுக்கு பின்பு இளம் நண்பர்களை பார்த்தது பெரு மகிழ்ச்சியை தருவதாக அவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். 31 பேரில் ஒரே ஒரு மாணவியாக இருந்த தன்னை மதிப்புடன் நடத்தியதாக அவர்களுடன் படித்த பெண் தெரிவித்தார்.