ஓடும் இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் நடுத்தொரடிப்பட்டு கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெள்ளிமலை பகுதிக்கு பெட்ரோல் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இவர் பெட்ரோல் வாங்கி விட்டு திரும்பி வரும் வழியில் ஊத்தக்கோடு அருகே திடீரென இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த தீ சக்திவேலின் உடல் முழுவதும் பரவியது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சக்திவேல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக கரியாலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.