உத்திரப்பிரதேச மாநிலத்தில் கோட்வாலி என்ற பகுதியில் இளம் பெண் ஒருவர் சுற்றித்திரிந்து உள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் அந்த பெண்ணை பிடித்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக அந்தப் பெண் பதிலளித்துள்ளார். அதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பெண்ணை சோதனையிட்டனர்.
அப்போது அந்த பெண் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டில் கைத்துப்பாக்கி ஒன்றை மறைத்து வைத்திருப்பதை கண்டறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்து போலீசார் கைது செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பெண் புல்பாரியில் வசிக்கும் கரிஷ்மா யாதவ் என்பதும் அவர் பள்ளி ஆசிரியையாக வேலை பார்ப்பதும் தெரிய வந்தது. மேலும், துப்பாக்கியுடன் சுற்றுவதை குறித்து கேட்டபோது, அவர் கூறிய விளக்கம் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கரிஷ்மா யாதவின் பெற்றோர் கடந்தாண்டு பிப்ரவரியில் இறந்துவிட்டநிலையில் இவர் தந்தைக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க உறவினர்கள் முயற்சித்து செய்து வருவதாகவும் அதனால் நான் தன்ஹார் பகுதியில் வசிக்கும் தாய் மாமாவுடன் தங்கியிருப்பதாக கரிஷ்மா யாதவ் கூறினார். மேலும், உறவினர்களால் உயிருக்கு ஆபத்து உள்ளதால், துப்பாக்கியை தன்னுடன் வைத்திருப்பதாக கரிஷ்மா தெரிவித்தார். ஆனால், அந்த துப்பாக்கிக்கு உரிமம் இல்லை என்பது தெரிய வரவே போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.