அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றி பெறும் நடைமுறையை இந்த ஆண்டும் நிறுத்தி வைக்க உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு பொருளாதார பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதிலும் குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ஆண்டுக்கு இரு முறை வழங்கப்படும். அதனை கடந்த 2020ஆம் ஆண்டு நிறுத்தி வைத்தது. இந்நிலையில் தற்போது குறைய தொடங்கிய நிலையில் அரசு ஊழியர்களுக்கு படிப்படியாக பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக கடந்த ஜனவரி மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 31 சதவீதம் அகவிலைப்படியை தமிழக அரசு ஊழியர்களும் பெற்று வருகின்றார்கள். இதனையடுத்து தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள் வரை விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விடுமுறை எடுக்காதவர்களுக்கு ஆண்டின் முடிவில் 15 நாட்களுக்கு உரிய ஊதியம் எவ்வித பிடிப்பும் இல்லாமல் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டதால் அரசுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றி பெறுவதை தடை செய்துள்ளது. இந்த ஆண்டு கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் இதற்கான தடை நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றி பெறுவதற்கு இந்த ஆண்டும் தடை தொடரும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. மேலும் இந்த தடை மறு அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.