Categories
அரசியல் மாநில செய்திகள்

“அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம்”….. டி.டி.வி-யிடம் விசாரணை…..!!!!

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை வி.கே.சசிகலா அணிக்கு வழங்க தேர்தல் ஆணையம் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்த விவகாரத்தில் அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரனிடம் தில்லியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

தமிழ்நாடு முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவைத் அடுத்து  ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு  இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது தினகரனின் உறவினர் வி.கே. சசிகலா தலைமையிலான அணியும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் கட்சியின் இரட்டை இலைச் சின்னத்திற்கு உரிமை கோரியதால் அ.தி.மு.க-வின் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இந்நிலையில் இடைத் தேர்தலில் வி.கே.சசிகலா அணிக்கு அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை வழங்குவதற்காக தேர்தல் ஆணையம் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க தினகரனிடம் பணம் வாங்கியதாக இடைத் தரகர் சுகேஷ் (எ) சந்திரசேகர் சென்ற 2017 ஏப்ரலில் 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தில்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கில்  டிடிவி தினகரனையும் தில்லி காவல்துறையினர் கைது செய்தனர். இதில் தினகரனுக்கும்-சந்திரசேகருக்கும் இடையில் ரூபாய் 50 கோடி பேரம் நடைபெற உதவியதாகக் கூறி தினகரனின் உதவியாளர் மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டார். அவர்கள் மீது காவல்துறையினர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். இவ்வழக்கில் டி.டி.வி தினகரன் பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் அதிமுகவிலிருந்து டி.டி.வி.தினகரன், வி.கே.சசிகலா ஆகிய இருவரும் 2017  ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நீக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருவரும் நீதிமன்றத்தில் வழக்குததொடர்ந்தனர். அவ்வழக்கில் இருந்து பிறகு டிடிவி தினகரன் விலகிய சூழ்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) எனும் அரசியல் கட்சியைத் தொடங்கி செயல்பட்டு வருகிறார். அவர் இதன் பொதுச்செயலாளராகவும் இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், தேர்தல் ஆணையம் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் முன்பே வேறுபல வழக்குகளில் திகார் சிறையிலிருந்து வரும் சுகேஷ் சந்திரசேகரை அமலாக்கத்துறையினர் இம்மாதம் 4ஆம் தேதி கைது செய்து வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். இது குறித்த விசாரணையை மேற்கொண்டு தொடரும் அடிப்படையில் டி.டி.வி. தினகரனிடம் விசாரணை மேற்கொள்ள அவரை தில்லியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்ற வாரம் அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். அந்த வகையில் தில்லி அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நேற்று காலை 11.30 மணிக்கு மேல் டிடிவி தினகரன் வந்தார். அதன்பின் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பல மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர்.

Categories

Tech |