மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே புதுப்பேட்டை கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன், ராஜேந்திரன் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர். இதைப்பார்த்த காவலர்கள் அவர்கள் கையில் இருந்த பெட்ரோல் கேனை வாங்கி தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன்பிறகு காவல்துறையினர் முத்துசாமி குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதற்கு கடந்த 2007-ஆம் ஆண்டு புதுப்பேட்டை கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டது.
இதற்காக நாங்கள் 60 சென்ட் நிலத்தை எழுதி கொடுத்தோம். இதில் 9 சென்ட் இடத்தை எங்கள் வசம் வைத்திருந்தோம். தற்போது எங்களுடைய நிலத்தை சுகாதாரத்துறையினர் ஆக்கிரமித்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால்தான் நாங்கள் தற்கொலை செய்ய முடிவு செய்தோம் என கூறியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் உங்களுடைய கோரிக்கைகளை மனுவாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் கொடுங்கள் என கூறினர். அதன்படி முத்துசாமி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துவிட்டு குடும்பத்துடன் அங்கிருந்து சென்றார்.