ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்பட்டதை வடகொரியா கண்டித்து இருக்கிறது. உக்ரைனில் ரஷ்யப்படைகள் பொதுமக்களைக் கொன்றது தொடர்பாக பெருகி வரும் ஆதாரங்களைத் தொடர்ந்து சென்ற வாரம் மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை நீக்க வேண்டும் என்று அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன்பீல்ட் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து வாக்கெடுப்பு நடந்தது. இத்தீர்மானத்துக்கு 93 நாடுகள் ஆதரவு தெரிவித்த நிலையில், 24 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல் 58 நாடுகள் வாக்களிக்கவில்லை. அதன்பின் ரஷ்யா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது.
இத்தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த 24 நாடுகளில் ஒன்றான வடகொரியா, இப்போது ரஷ்யாவின் இடைநீக்கத்தை கண்டித்து உள்ளது. இது தொடர்பில் கிம் ஜாங் உன் தலைமையிலான வடகொரியா அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமை கவுன்சிலிலிருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு அமெரிக்காவே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளது. இதனிடையில் அமெரிக்கா சட்டவிரோத மற்றும் மனிதாபிமானமற்ற அதன் தலைமையிலான மேலாதிக்க ஒழுங்கை நிலைநிறுத்த சுதந்திர நாடுகளையும், சர்வதேச அரங்கில் அவர்களுக்கு சவால்விடும் சக்திகளையும் தனிமைப்படுத்துகிறது. பிற நாடுகள் மீது அரசியல் அழுத்தம் கொடுப்பதற்காக அமெரிக்காவுக்கு சர்வதேச அமைப்புகளை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்று வடகொரியா தெரிவித்துள்ளது.