உணவில் பல்லி இறந்து கிடந்த சம்பவம் குறித்து மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு விடுதியில் தங்கி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 3 வேளையும் உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை விடுதியில் தங்கியிருக்கும் மாணவ மாணவிகளுக்கு பூரி, கிழங்கு வழங்கப்பட்டுள்ளது. அப்போது கிழங்கில் பல்லி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் விடுதி காப்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மாணவர்கள் பல்கலைக்கழக பதிவாளர் மருது குட்டியை நேரில் சந்தித்து புகார் அளித்தனர். இதுகுறித்து மாணவர்கள் கூறும்போது, சில நாட்களாக விடுதியில் வழங்கப்படும் உணவு சரியாக இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு உணவில் கரப்பான்பூச்சி கிடந்தது. இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்டது. எனவே சுகாதாரமான உணவு வழங்க பல்கலைக்கழக நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.