பாலிவுட்டில் பிரபல நடிகையாக சோனம்கபூர் இருக்கிறார். அதாவது பிரபல நடிகர் அனில் கபூரின் மகளான சோனம் கபூரின் கணவர் ஆனந்த் அகுஜா ஆவார். திருமணம் முடிந்த பிறகு இருவரும் டெல்லியில் வசித்து வருகின்றனர். கர்ப்பிணியாக உள்ள இவர் அண்மையில் தன் இன்ஸ்டாகிராமில் கர்ப்பகால போராட்டம் குறித்தும், அது எவ்வளவு கடினம் நிறைந்தது என்பது பற்றியும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். மேலும் தன் கணவருடன் உள்ள ஒரு போட்டோவை சோனம் கபூர் வெளியிட்டார். இந்நிலையில் சென்ற பிப்ரவரி 11ஆம் தேதி இவர்களது வீட்டில் இருந்து நகை மற்றும் பணம் கொள்ளை போய்விட்டது. இந்த சம்பவம் நடந்து 2 வாரங்களுக்கு பின், சென்ற பிப்ரவரி 23ம் தேதி அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இதேபோன்று டெல்லியிலுள்ள அம்ரிதா ஷெர்கில் மார்க் பகுதியில் ஹரீஷ் அகுஜாவின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து சென்ற பிப்ரவரி 23ம் தேதி புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரில் வீட்டிலிருந்து ரூபாய் 2.4 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளை போயுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது. மேலும் குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சைபர் மோசடி வழியே நடைபெற்ற இந்த கொள்ளையில் தொடர்புடைய டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கர்நாடகா என்று நாடு முழுவதிலுமிருந்து 9 பேர் கைது செய்யப்பட்டனர். இத்தகவலை காவல்துறையினர் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டனர். இந்த நிலையில் நடிகை சோனம்கபூரின் வீட்டிலிருந்து ரூபாய் 2.4 கோடி மதிப்புள்ள நகை மற்றும் பணம் கொள்ளை போன சம்பவம் தெரியவந்துள்ளது.