மது அருந்திக் கொண்டு தாயிடம் பிரச்சனை செய்த அண்ணனை சகோதரர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டம், பூந்தமல்லியை அடுத்த கண்டோன்மெண்ட் ரைட்டர் தெருவில் வசித்து வந்தவர் 40 வயதுடைய கணேஷ். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததால் மனைவியை பிரிந்து தனது தம்பிகளான 30 வயதுடைய மணி, 35 வயதுடைய குமார் மற்றும் தாயுடன் வசித்து வந்துள்ளார். கணேஷ் தினம்தோறும் குடித்துவிட்டு தனது தாயை தகாத வார்த்தைகளால் திட்டி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி இரவு வழக்கம் போல் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த கணேஷ் தனது தாயிடம் பிரச்சினை செய்துள்ளார்.
இதனால் கோபம் அடைந்த அவரது தம்பிகள் மணி மற்றும் குமார் ஆகிய இருவரும் வீட்டில் இருந்த கத்தி, கத்தரிக்கோலை எடுத்து பிரச்சனை செய்த அண்ணன் கணேஷின் கழுத்தை குத்தி அறுத்து விட்டார்கள். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த கணேஷ் துடிதுடித்து அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சகோதரர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து பூந்தமல்லி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இத்தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் தலைமையில் வந்த காவல்துறையினர் கணேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து தலைமறைவாக இருந்த குமார் மற்றும் மணி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.