விழுப்புரம் அருகில் பிரபல ரவுடியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், கீழ்பெரும்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் கந்தன் என்பவருடைய மகன் அறிவு என்ற அறிவழகன் (36). இவர் பிரபல ரவுடி ஆவார். இவர் மீது கடந்த 2006ம் வருடம் முதல் 2017ஆம் வருடம் வரை மொத்தம் 21 வழக்குகள் பதிவாகியுள்ளது. அதாவது 4 கொலை முயற்சி வழக்குகள், 3 கொலை வழக்குகள், 9 வழிப்பறி கொள்ளை வழக்குகள், 2 நாட்டு வெடிகுண்டு வீசி கொலை முயற்சி வழக்குகள், 3 தகராறு வழக்குகள் ஆகும்.
இதில் 13 வழக்குகளில் கடந்த 2018-ஆம் வருடத்தில் இருந்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து ரவுடி அறிவழகனை விழுப்புரம் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 14ஆம் தேதி அன்று கண்டமங்கலத்தில் உள்ள வள்ளலார் அரசு பள்ளி அருகில் மோட்டார் வாகனத்தில் வந்து கொண்டிருந்த கூலித் தொழிலாளியான 35 வயதுடைய சபாபதி என்பவரை அறிவழகன் வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி ரூ 5 ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு தப்பி ஓட முயன்றார்.
அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் வந்த கண்டமங்கலம் காவல் துறையினர் அறிவழகனை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். இதை தொடர்ந்து பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுப்பதற்காக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஸ்ரீ நாதா பரிந்துரை செய்துள்ளார்.
இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டு மாவட்ட கலெக்டர் மோகன் அறிவழகனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கண்டமங்கலம் காவல்துறையினர் நேற்று அவரை கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர். இதற்கான உத்தரவு நகலை சிறை அலுவலர்கள் அவரிடம் கொடுத்தனர் .