Categories
சென்னை மாநில செய்திகள்

தனியார் போனால் ரூ40,00,000….. அரசிடம் இலவசம்….. 2020 ஆம் ஆண்டின் முதல் சாதனை….!!

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 2020 ஆம்  ஆண்டின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.

கோயம்பத்தூர் மாவட்டம் காந்திபுரம் பகுதியில் வசித்து வருபவர் மகேந்திரன். இவர்  ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சென்ற ஆண்டு ஜனவரி மாதம் திடீரென இதயத்தில் கோளாறு ஏற்படுத்தபட்டதையடுத்து, இவரது உறவினர்கள் கோயம்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள்  சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள், மகேந்திரனுக்கு இதயத்தில் உள்ள அனைத்து வால்வுகளும் சேதமடைந்து, இதயம் செயலிழந்திருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து மருத்துவமனை டீன் மருத்துவர்  ஜெயந்தி அவர்களின் மேற்பார்வையில், மருத்துவர் ஜோசப்ராஜ், வெள்ளிங்கிரி ஆகியோர் தலைமையில் மகேந்திரனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடபட்டது.

இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர் ஒருவரின் இதயத்தை, அவருடைய உறவினர்களின் அனுமதியுடன்  தானமாக பெறப்பட்டு, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மகேந்திரனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து மருத்துவமனை டீன் மருத்துவர் ஜெயந்தி கூறியதாவது,

முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக மகேந்திரனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதனை  தனியார் மருத்துவமனையில் செய்தால் ரூ.35 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை செலவாகும் என்று கூறிய அவர், 2020 ஆம் ஆண்டின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை இது தான் என்று கூறினார். இதுவரை 11 இதய மாற்று அறுவை சிகிச்சை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Categories

Tech |