பா.ஜனதா கட்சியின் நிறுவன தினம் இன்று (ஏப்ரல்.6) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பா.ஜனதாவின் எம்பிக்களை பிரதமர் நரேந்திர மோடிசந்தித்து பேசிய நிலையில், சமூகத்தின் பல மட்டங்களிலுள்ள மக்களுக்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் வளர்ச்சி திட்டங்களை எடுத்துரைத்தார். பிரதமர் மோடி, இதை மக்களிடம் எடுத்துச் செல்லுமாறு எம்பிக்களை கேட்டுக்கொண்டார். இதையடுத்து கட்சியின் நிறுவன தினத்தை முன்னிட்டு நாளை (ஏப்ரல்.7) முதல் சமூக நீதிக்கான 15 நாட்கள் கடைப்பிடிக்கப்படுவதால் இந்த தினங்களில் மக்கள் சேவையில் ஈடுபடுமாறும் எம்பிக்களை பிரதமர் அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, மத்திய அரசின் இலவச ரேஷன் திட்டம், கொரோனா தடுப்பூசி திட்டம், ஆயுஷ்மான் பாரத், ஜன ஆஷாதி கேந்திரா உள்ளிட்ட திட்டங்களை பயனாளிகளுக்கு கொண்டு சேர்க்கும் பணிகளை எம்பிக்கள் மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.