விழுப்புரம் மாவட்டம் கொலுவாரி ஊராட்சியில் ரூ.2 கோடியே 88 லட்சம் மதிப்பில் 100 வீடுகளுடன் கட்டப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரம் திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த விழாவில் சமத்துவபுரம் பகுதியை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால் அந்தப் பகுதிக்கு சென்ற மு.க ஸ்டாலின் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை அழைத்து அந்த பகுதியில் ரிப்பன் வெட்டி திறந்து வைக்கச் சொன்னார்.
இது அனைத்து தரப்பு மக்களையும் நெகிழ்ச்சியடைய செய்தது. இதையடுத்து அந்த பகுதியில் கட்டப்பட்டிருந்த பெரியார் சிலையை திறந்து வைத்த ஸ்டாலின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பயனாளிகளுக்கு வீட்டின் சாவியை வழங்கினார். அப்போது அந்த வீட்டை பயனாளிகளை வைத்தே ரிப்பன் வெட்டி திறக்கச் செய்தார். இதனை கண்டு சுற்றியிருந்தவர்கள் மிகவும் ஆச்சரியம் அடைந்தனர். முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட இருந்த அனைத்து நலத்திட்ட பணிகளும் பயனாளிகளாலேயே திறந்து வைக்கப்பட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.