மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாண்டியன் நகரில் எலக்ட்ரீஷியனான முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுமித்ரா என்ற மனைவி உள்ளார். இவர் சவுதி அரேபியாவில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த வாரம் சுமித்ரா குடும்பத்தை கவனிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் முத்துகிருஷ்ணன் அருப்புக்கோட்டை சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் செக் போஸ்ட் கம்பத்தில் பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முத்துகிருஷ்ணனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முத்துக்கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.