அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் ஆற்றூர் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரன் தலைமையிலான ஒரு குழு பேரூராட்சி பகுதிகளில் ஆய்வு பணியை மேற்கொண்டனர்.
இவர்கள் ஆற்றூர் சந்திப்பு, புளியமூடு, கல்லுப்பாக்கம், சோமனூர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ளிருக்கும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், பேக்கரிகள் போன்ற கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியவர்கள் மீது அபராதம் விதித்துள்ளனர். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தினால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.