31வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தமிழகமெங்கும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ,தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்படுகிறது. இன்று முதல் 27 ஆம் தேதி வரை 31 வது சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது .இதில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஓட்டுனர்களுக்கு மருத்துவ முகாம்கள், சாலை பாதுகாப்பு உறுதிமொழிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அந்தவகையில் சேலத்தில் தலைக்கவசம் குறித்து இருசக்கர வாகன பேரணி நடத்தப்பட்டது. இதில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
இதேபோல புதுக்கோட்டையிலும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இதில் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் மற்றும் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் போக்குவரத்து துறை சார்பில் ,சாலை பாதுகாப்பு வாரத்தை ஒட்டி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது .இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதேபோல கரூரில் நடைபெற்ற இருசக்கர விழிப்புணர்வு பேரணியில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.