வெவ்வேறு சம்பவங்களில் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பி.டி.ஆர் காலனியில் வசித்து வரும் சந்திரா என்ற மூதாட்டியின் 4 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர் ஒருவர் கடந்த வாரம் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார். இதேபோல் பெரியகுளம் குள்ளப்புரம் அருகே உள்ள வரதராஜநகரில் வசித்து வரும் செல்வி என்ற பெண்ணிடம் இருந்தும் மர்மநபர்கள் 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு சென்றனர்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் நகை திருட்டில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த பாண்டியன்(29) மற்றும் சென்னையை சேர்ந்த லோகநாதன்(27) என்ற 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இவர்கள் மீது பல்வேறு வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
எனவே கைது செய்யப்பட்ட 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யகோரி மாவட்ட ஆட்சியர் முரளிதரனுக்கு தேனி சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோங்கரே பரிந்துரை செய்துள்ளனர். அந்த பரிந்துரையை ஏற்றுகொண்ட ஆட்சியர் லோகநாதன் மற்றும் பாண்டியனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் 2 வாலிபர் மீதும் குண்டர் சட்டத்தில் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.