நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நகராட்சி பகுதிகளில் கலைஞர் திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார். இவர் ஏமப்பூர் மற்றும் விளாந்தாங்கல் பகுதியில் நடைபெற்று வரும் சாலை பணிகளை முதலில் ஆய்வு செய்தார். அப்போது வடிகால் வசதியுடன் கூடிய சாலைகளை தரமானதாக அமைக்க வேண்டுமென வலியுறுத்தினார். இதனையடுத்து விஜயலட்சுமி நகர் மற்றும் டி.எம்.எஸ் நகர் பகுதிகளில் பூங்காக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
இந்த மேம்பாட்டு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நகராட்சி குப்பை கிடங்கில் குப்பைகள் தரம் பிரிக்கப்படுவதை ஆய்வு செய்தார். அவர் பொதுமக்களிடம் குப்பைகளை தரம்பிரித்து கொட்டுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என நகராட்சி ஆணையருக்கு உத்தரவு வழங்கினார். இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையர்கள் குமரன் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.