இருசக்கர வாகனம் மீது லாரி மோதி வாலிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டம் தூறையூரில் வசித்து வந்த பூர்வின் சங்கர்(19), சப்தகிரி வாசன்(19) ஆகிய இருவரும் தொட்டியம் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் இருசக்கர வாகனத்தில் நாமக்கல் மாவட்டம் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தை சப்தகிரி வாசன் ஓட்டினார்.
அப்போது மோகனூர் அருகே என்.புதுபட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி ஒன்று திடீரென இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த கோரவிபத்தில் வாலிபர்கள் இருவரும் தூக்கிவீசப்பட்டு பலத்தகாயம் அடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக வாலிபர்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே சப்தகிரி வாசன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தற்போது சங்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற மோகனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.