அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இலுப்பைக்குடி கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிலிமிசை கிராமத்தில் உள்ள ஒரு ஓட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது உறவினரை பார்த்துவிட்டு இலுப்பைக்குடி செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முருகேசனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இதில் படுகாயமடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகேசனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.