மழையூர் கிராமத்தில் அரசு பேருந்து தினமும் சரியாக செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம். கறம்பக்குடி அருகில் மழையூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இப்பள்ளியில் சுமார் 1800 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கு வெள்ளாளவிடுதி, கருப்பட்டி பட்டி, சொக்கநாதபுரம், அதிரான்விடுதி, மீனம்பட்டி, கணபதிபுரம் உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்தும் 100க்கும் அதிகமான மாணவ மாணவிகள் வருகின்றனர்.
இதை தொடர்ந்து இந்த கிராமங்களிலிருந்து படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வர புதுக்கோட்டையிலிருந்து மழையூர் அதிரான்விடுதி வழியாக கணபதிபுரம் வரை அரசு பேருந்து இயக்கப்பட்டு அதில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாசும் வழங்கப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் இந்த அரசு பேருந்து சரியாக வருவதில்லை. வாரத்தில் இரண்டு தினங்கள் மட்டுமே வருகிறது. வேறு மாற்று பேருந்துகளும் வரவில்லை.
இதனால் மாணவ மாணவிகள் தினமும் 15 கிலோ மீட்டர் தூரம் நடந்து பள்ளிக்கு வருகின்றார்கள். மேலும் பொது தேர்வு நெருங்கி வருவதால் தினமும் காலை மாலை இரண்டு மணி நேரம் நடந்து செல்வது மாணவர்களுக்கு சோர்வை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
எனவே மாணவர்களின் நலனை கருதி புதுக்கோட்டை – கணபதிபுரம் வழி பாதையில் இயக்கப்படும் பேருந்தை தடையின்றி தினமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.