பட்டியலிடப் பட்டுள்ள ஒரு தில்லி விடுதி காஷ்மீரை சேர்ந்த நபரை விடுதியில் தங்குவதற்கு அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து விடுதியை கண்டித்து சமூகவலைதளங்களில் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதாவது தேதி குறிப்பிடப்படாத அந்த வீடியோவில் வரவேற்பு அறையில் உட்கார்ந்திருந்த பெண் ஊழியர், காஷ்மீரை சேர்ந்தவருக்கு விடுதியில் தங்க அனுமதி மறுப்பதுபோல தெரிகிறது. ஆதார் உட்பட தகுந்த அடையாள சான்றிதழ் காட்டிய பின்பும், காஷ்மீரை சேர்ந்த அந்நபருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விடுதியில் தங்க ஒயோ இணையதளம் வாயிலாக அந்நபர் பதிவு செய்துள்ளார். அதன்பின் விடுதிக்கு அந்நபர் நேரில் வந்தபின் தன் மூத்த அலுவலரிடம் அந்த பெண் ஊழியர் தொலைபேசியில் தொடர்புகொள்வது போன்று வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் அந்நபருக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்..? என்பது தொடர்பாக அவரிடமே தொலைபேசியில் கூறுமாறு பெண் ஊழியர் மூத்த அலுவலரிடம் தெரிவிக்கிறார். அதனை தொடர்ந்து உரையாடலுக்கு பின் விடுதியில் தங்க காஷ்மீரை சேர்ந்தவர்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று தில்லி காவல்துறை வலியுறுத்தியதாக அந்நபருக்கு பெண் ஊழியர் விளக்கம் அளித்துள்ளார். பின் ஜம்மு காஷ்மீர் மாணவர் அமைப்பின் தலைவர் நசீர் கொய்ம், இச்சம்பவம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விடியோவை ட்விட்டரில் பதிவிட்ட அவர் “காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தகுந்த அடையாள அட்டை உட்பட மற்ற ஆவணங்கள் காட்டிய பின்பும் காஷ்மீரை சேர்ந்த நபருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரை சேர்ந்தவராக இருப்பது குற்றமா.? என்று பதிவிட்டுள்ளார். காஷ்மீரிகளை விடுதியில் தங்குவதற்கு அனுமதிக்க வேண்டாம் என ஏதேனும் உத்தரவிடப்பட்டுள்ளதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு விளக்கம் அளித்துள்ள தில்லி காவல்துறை, “ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர் என்பதால் விடுதியில் முன் பதிவு மறுக்கப்படுவதாகக் கூறப்படும் விடியோ சமூகஊடகங்களில் வைரலாகியுள்ளது. ஆகவே ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் காவல்துறையின் வழிகாட்டுதலாகக் கூறப்படுகிறது. அவ்வாறு எந்த வழிகாட்டுதலும் வழங்கப்படவில்லை, வேண்டுமென்றே தவறாகக் கூறினால் தண்டனைக்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சில நெட்டிசன்கள் தில்லி போலீசாரை வேண்டுமென்றே தவறாக சித்தரிக்கின்றனர். அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.