உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று இருந்தாலும் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. இந்நிலையில் ஜெர்மனியின் முன்னாள் சர்வாதிகாரி ஹிட்லர் நடத்திய நாஜி வதை முகாம்களிலிருந்து தப்பிய 96 வயது முதியவர் ரஷ்ய ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
உக்ரைன் கார்கிவ் பகுதியில் வசித்து வந்தவர் போரிஸ் ரோமன் சென்கோ(96). இவர் சென்ற வெள்ளிக் கிழமை அன்று ரஷ்ய ராணுவம் நடத்திய ஷெல்தாக்குதலில் உயிரிழந்தார். இது தொடர்பாக உக்ரைனின் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா டுவிட்டர் பதிவில், 96 வயதான போரிஸ் ரோமன் சென்கோ புச்சென்வால்ட், பீனெமுண்டே, மிட்டல்பாவ்-டோரா, பெர்கன்-பெல்சன் போன்ற 4 நாஜி வதை முகாம்களில் இருந்து தப்பியவர் ஆவார்.
அவர் இறப்பதற்கு முன்பு வரையிலும் கார்கீவில் தனது அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ரஷ்ய ராணுவத்தின் வெடிகுண்டு இவரது வீட்டில் விழுந்து இவர் உயிரிழந்து விட்டார். ஹிட்லரிடமிருந்து உயிர் பிழைத்த இவர் தற்போது புதினால் கொல்லப்பட்டுள்ளார் என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.