ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் முதன் முறையாக ஓ.பன்னீர்செல்வம் நேற்று நேரில் ஆஜரானார். மேலும் சசிகலா உறவினா் இளவரசியும் நேற்று ஆஜரானார். அவ்வாறு ஆறுமுகசாமி ஆணையத்தில் நேற்று நேரில் ஆஜரான ஓபிஎஸ்ஸிடம் காலை முதல் சுமார் மூன்றரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
அதாவது ஜெயலலிதா சிகிச்சை வார்டில் சிசிடிவி அகற்றம், அமெரிக்காவில் இருந்து வந்த மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக 78 கேள்விகளுக்கு ஓபிஎஸ் பதில் அளித்தார். அதனை தொடர்ந்து ஜெயலலிதா மரணம் குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் இன்று மார்ச் 22ஆம் தேதியும் விசாரணை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஜெயலலிதா மரணம் பற்றிய ஆறுமுகசாமி ஆணையத்தின் 2 ஆம் நாள் விசாரணைக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகியுள்ளார்.
இந்நிலையில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும் என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் வாக்குமூலம் அளித்துள்ளார். இன்று 2-வது நாளாக ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான ஓபிஎஸ், “ஜெயலலிதாவிற்கு என்னென்ன உணவுகள் தரப்பட்டது என்று எனக்கு தெரியாது. அரசாங்க பணிகள் தொடர்பாக ஜெயலலிதா கூறியதாக சசிகலா எந்த தகவலையும் என்னிடம் கூறவில்லை என்று தெரிவித்துள்ளார்.