தமிழகத்தில் பெண்கள் மத்தியில் “தாலிக்கு தங்கம்” திருமண நிதியுதவி திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டம் மூலம் பத்தாம் வகுப்பு படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம், ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வந்தது. அதேபோல் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயமும், ரூ.50 ஆயிரம் நிதியுதவியும் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் இன்று 2022-23ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் “இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம்” மாற்றி அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தமிழக பட்ஜெட்டில் 83-வது எண்ணில் வெளியான அறிவிப்பின்படி, “தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவிகளின் உயர் கல்வி சேர்க்கை மிக குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டமானது மாற்றம் செய்யப்பட்டு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளும் தொழிற் படிப்பு, பட்டயப் படிப்பு, பட்டப்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இல்லாமல் முடிக்கும் வரை அவர்களுடைய வங்கி கணக்கில் ரூ.1,000 நேரடியாக செலுத்தப்படும். அதேபோல் ஏற்கனவே கல்வி உதவித்தொகை பெறும் மாணவிகளும் இந்த திட்டத்தின் மூலம் கூடுதலாக உதவி தொகையை பெற முடியும். இந்த திட்டத்தின் மூலம் சுமார் 6 லட்சம் மாணவிகள் பயனடைய வாய்ப்பு உள்ளது.
இந்த திட்டத்திற்காக ரூ. 698 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண நிதி உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண நிதியுதவி திட்டம், அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவி திட்டம், ஈ.வே.ரா மணியம்மையார் நினைவு வறிய நிலையில் உள்ள விதவையரின் மகள்களின் திருமண நிதியுதவி திட்டம் ஆகியவை எந்தவித மாற்றமும் இன்றி தொடர்ந்து செயல்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.