திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி தீர்க்கமான நடவடிக்கை அரசின் வருவாய் பற்றாக்குறை 4.16 சதவீதத்திலிருந்து 3.O8 சதவீதமாக குறைவு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை அச்சுறுத்தலாக இருந்த நிலையில் தற்போது அது மாற்றப்பட்டு உள்ளது. இக்கட்டான சூழலில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றாலும் தொலைநோக்கு திட்டங்களை வகுத்துள்ளோம் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு நாட்டிலோ அல்லது பிற நாடுகளிலோ கல்வியை தொடர தமிழக அரசு தேவையான உதவிகளை வழங்கும். புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழக மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து ஊக்குவிக்கப்படும் . புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்திற்கு ரூபாய் 1,949 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். புதியதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களில்36 கோடி மதிப்பீட்டில் மாவட்ட மைய நூலகங்கள் அமைக்கப்படும் என்று நிதி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.