மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 1.39 கோடி ரூபாய் மதிப்பிலான 3.4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
வெளிநாடுகளிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு பெருமளவில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கிடைத்த தகவலின் அடிப்படையில், சுங்கத் துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது இலங்கையிலிருந்து விமானத்தில் வந்த இலங்கையைச் சேர்ந்த முகமது ரிஸ்கான் (47), அல்தாப்(51), முகமது ரிமாஸ்(33), முகமது ரபீக்(39), முகமது லகீர்(36) மற்றும் பெண் பயணி சம்சுல் வாடிகா(45) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர்.
அப்போது முன்னுக்குப்பின் முரணாக அவர்கள் பேசியதால் அவர்களின் உடமைகளை சோதனை செய்தபோது அதில் எதுவும் இல்லாததால் அவர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அதில், உள்ளாடைக்குள் தங்க கட்டிகளை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடமிருந்து 1.39 கோடி ரூபாய் மதிப்புடைய 3.4 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
தற்போது, சுங்கத்துறை அலுவலர்கள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.