காவல் துறை செயல்பாடுகள் தொடர்பான மக்களின் மனநிலையை உடனுக்குடன் உளவு பிரிவு போலீஸாருக்கு தெரிவிக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
உளவு பிரிவு போலீசார் தங்களை காவல்துறையை சேர்ந்தவர்கள் என அடையாளம் காட்டிக்கொள்ள மாட்டார்கள். பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், சமூக விரோதிகள் நடமாட்டம், பிற நாட்டினரின் சட்டவிரோத ஒன்றியங்கள் போன்ற தகவல்கள் ரகசியமாக சேகரித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிப்பார்கள். அதனடிப்படையில் சட்டம் ஒழுங்கு அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வார்கள். இதன் மூலம் குற்றச்செயல்கள் முன்னே தடுத்து நிறுத்தப்படுகிறது.
இந்நிலையில் சமீபகாலமாக புலனாய்வுப் பணியில் உளவு பிரிவு நேரம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக நிகழ்ச்சி அல்லது குற்ற சம்பவம் நடைபெற்ற பின்னரே அது குறித்த தகவல்களை உயர் அதிகாரிகளுக்கு அளிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடந்து முடிந்த நிகழ்வுகள், சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் திரட்டுவதே குறைத்துக்கொண்டு அது போன்ற நிகழ்வுகள் நடப்பதற்கு முன்னரே அது தொடர்பான தகவல்களை திரட்ட முயற்சி செய்யுமாறு உளவு பிரிவு போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசின் திட்டங்கள் காவல் துறையின் செயல்பாடுகள் காரணமாக பொதுமக்கள், வியாபாரிகள், வணிகர்கள் போன்ற அனைத்து தரப்பினரும் மனநிலை மற்றும் மகிழ்ச்சி, விரக்தி, ஏமாற்றம், எதிர்பார்ப்பு போன்ற தகவல்களை திரட்டி உளவுப் பிரிவு அதிகாரிகளுக்கு அவ்வபோது தெரிவிக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருக்கிறார். ஜாதி மோதல்கள் ,இருதரப்பில் இடையிலான பிரச்சினைகள், ரவுடிகளின் பழிக்குப் பழிவாங்கும் நடவடிக்கைகள் போன்றவை நிகழாதபடி முன்னரே தகவல்களை திரட்டுமாறு உளவு பிரிவு போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்கவும், லஞ்சம் மற்றும் முறைகேடுகளைத் தவிர்க்கவும் திறமையான, துடிப்பான காவல் கண்காணிப்பாளர்களை, மாவட்டங்களில் நியமிக்க டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டிருக்கிறார்.இதனையடுத்து அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்களில் பணிகளை மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் எதிர்பார்த்த அளவுக்கு பணியை மேற்கொள்ளாதவர்கள் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மாற்றப்பட்டு அந்த இடத்தில் துடிப்பான அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.