அரசு ஊழியரிடம் இருந்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடி செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை ஈங்கூர் மேற்கு வீதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் துணை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனிசாமியின் செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் பான் கார்டு குறித்த விவரத்தை தெரிவிக்க ஒரு லிங்க் அனுப்பப்பட்டுள்ளது. எதார்த்தமாக பழனிச்சாமி அந்த குறுந்தகவலை கிளிக் செய்த போது அடுத்தடுத்து இரண்டு ஓ.டி.பி எண் கொண்ட குறுந்தகவல்கள் வந்துள்ளது.
சிறிது நேரத்தில் செல்போனில் வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்ததால் அதிர்ச்சியடைந்த பழனிச்சாமி சேமிப்பு கணக்கு வைத்துள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். அப்போது பழனிசாமியின் வங்கி கணக்கில் இருந்து 60 ஆயிரம் ரூபாய் மாயமானது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பழனிச்சாமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோசடி செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.