சாலையில் அறுந்து விழுந்த மின் கம்பியை உடனடியாக சரி செய்ததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதி வழியாக ஏராளமான பொதுமக்கள் சென்று வருகின்றனர். நேற்று காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு மின்சாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முத்தாலம்மன் பஜாரில் இருந்து கூமாபட்டி செல்லும் சாலையில் இருக்கும் மின்கம்பி திடீரென அறுந்து விழுந்தது.
இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக மின் வாரியத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக மின் விநியோகத்தை துண்டித்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அறுந்து கிடந்த மின் கம்பியை சரி செய்தனர். இந்த சம்பவம் நடந்த சமயத்தில் பொதுமக்கள் அங்கு இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.