மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பேரம்பாக்கத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரி முடிந்து மாணவர்கள் வீட்டிற்கு செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயிலில் சென்றுள்ளனர். இந்த ரயில் பெரம்பூர் லோகோ-கேரேஜ் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்த போது வெங்கடேஷும், அவரது நண்பரான விஜய் என்பவரும் மின்சார ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்துவிட்டனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் அலறி சத்தம் போட்டதால் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து படுகாயமடைந்த இரண்டு பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேஷ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் விஜய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.